என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். சங்கீதம் 30:11.

குளிர்காலத்தின் மௌனம் கலைந்து, வசந்தகாலத்தின் மகிழ்ச்சி மலரத் துவங்குகிறது.  சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, பூமியில் பருவகாலங்களை உருவாக்கியவர் நீர் என்பதை நான் அறிவேன். இந்த பருவகாலங்கள், என் சொந்த வாழ்க்கையின் பருவங்களை மிக அழகாக பிரதிபலிக்கிறது.

நான் சோதனை காலங்களில் இருந்தபோது இனி என் வாழ்க்கை ஒருபோதும் முன்பு போல் மாறாது என்றே  தோன்றியது. என் இதயம் துக்கத்தால் உறைந்திருந்தது.  வேதனையில் அமிழ்ந்து போனேன்.  ஆனால் நாட்கள் நகர நகர, காலங்கள் மாற  என் வேதனைகள் மறையத் துவங்கியது.  என் இதயம் அமைதி அடைந்து.  என் உள்ளத்தில் மகிழ்ச்சி துளிர்க்க ஆரம்பித்தது. இவை எனது ஆத்துமா ஒரு புதிய பருவத்தை அடைந்ததை உணர்த்தியது. என் ஆண்டவரே, நான் மறந்து போன வாழ்க்கையை மீண்டும் வாழ மென்மையாக கற்றுத்தந்த உமது கிருபைக்காக நன்றி!

உங்கள் வாழ்வில் நடக்கும் எந்த காரியமும் உங்கள் மனதை  சோகத்தால் நிறப்ப ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். - அன்னை தெரசா